வாகனம் மோதி 2 பெண்கள் பரிதாப சாவு


வாகனம் மோதி 2 பெண்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 5 July 2018 9:30 PM GMT (Updated: 5 July 2018 5:44 PM GMT)

வாலிநோக்கம் அருகே அதிகாலையில் குடிநீர் பிடிக்க சென்றபோது வாகனம் மோதி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாயல்குடி,

வாலிநோக்கம் அருகே உள்ள ஓடைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காஞ்சி மனைவி அங்கம்மாள்(வயது 60), செல்வராஜ் மனைவி ராமாயி(45). முருகவேல் மனைவி சண்முகவள்ளி(55). இவர்கள் 3 பேரும் நேற்று அதிகாலையில் குடிநீர் எடுப்பதற்காக தள்ளுவண்டிகளில் குடத்தை எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கிழக்கால் கண்மாய் கரை அருகே அவர்கள் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ராமாயி, சண்முகவள்ளி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். சண்முகவள்ளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முகமது நசீர், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சண்முகவள்ளியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது மாவட்ட அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஜவகர்லால் உடனிருந்தார்.

Next Story