தேசிய, கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்


தேசிய, கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 5 July 2018 10:45 PM GMT (Updated: 5 July 2018 8:03 PM GMT)

தேசிய கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறவும், பால், கரும்பு, மா, தென்னை, நெல், காய்கறிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும், இலவச மின்சாரம் வழங்கிட கோரியும் என 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் கே.எம். ராமகவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் வண்ணப்பா, நசீர்அகமத், தோப்பையகவுண்டர், சுப்பிரமணிரெட்டி, பெருமா, ராஜா, கோவிந்தராஜ், வேலு, ராஜேந்திரன், அசோக்குமார், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த மாவட்ட பொது செயலாளர் சுந்தரேசன் வரவேற்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் சூலூர் சுப்பிரமணியம், கோவை மாவட்ட தலைவர் சுந்தர்சாமி, மாநில செயலாளர் வேலுமணி, மாநில துணைத் தலைவர் சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் பெரிய, சிறிய விவசாயி என பாகுபாடு பார்க்காமல் தள்ளுபடி செய்து, பயிர் செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் பெற்ற கல்வி கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சார்ந்த தொழில்களான மலர்கள் உற்பத்தி, கோழிப்பண்ணைகள், மாங்கூழ் தொழிற்சாலை போன்றவற்றிற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

பயிர் சேதம் செய்யும் வன விலங்குகளை சுட அனுமதி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பக்கத்து மாநிலத்தில் இருந்து போலி, விதைகள், பூச்சி மருந்துகள், உரங்கள் வருவதை தடுக்க வேண்டும். விவசாய விலை பொருட்களை தேசிய நெடுஞ்சாலை வழியாக எடுத்துச்செல்வதற்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்ட உழவர் தின ஊர்வலம், சேலம் சாலை, 5 ரோடு வழியாக பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றடைந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதே போல ஓசூரிலும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் எஸ்.எஸ்.ரங்கசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் அரிமூர்த்தி, கண்ணன், துணை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் வரவேற்று பேசினார். இதில், கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் நாராயணரெட்டி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரங்கசாமி, பொதுச்செயலாளர் வேணுகோபால், மாநில துணை செயலாளர் கோனப்பன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Next Story