சென்னையில் கொடூர சம்பவம்: வெந்நீர் ஊற்றி கொடுமைப்படுத்தி வேலைக்கார பெண் கொலை 2 பெண்கள் கைது


சென்னையில் கொடூர சம்பவம்:  வெந்நீர் ஊற்றி கொடுமைப்படுத்தி வேலைக்கார பெண் கொலை 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 5 July 2018 11:00 PM GMT (Updated: 5 July 2018 8:10 PM GMT)

சென்னை பெசன்ட் நகரில் வெந்நீர் ஊற்றி கொடுமைப்படுத்தி வேலைக்கார பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு, 

சென்னை பெசன்ட்நகர் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம் (வயது 51). இவர், காஞ்சீபுரத்தில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுஷ்மிதாபிரியா (45). இவர்களது வீட்டில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த மகாலட்சுமி (19) என்ற பெண், கடந்த 5 ஆண்டுகளாக அங்கேயே தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்தார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக, சாஸ்திரி நகர் போலீசாருக்கு முருகானந்தம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் காயங்கள்

அப்போது மகாலட்சுமியின் உடலில் வெந்நீர் கொட்டியதால் ஏற்பட்ட கொப்பளங்களும், சூடு போடப்பட்டதற்கான தழும்பும் இருந்தன.

இதுபற்றி முருகானந்தத்திடம் விசாரித்தபோது, ‘‘கடந்த 4 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த மகாலட்சுமிக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்தோம். நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டார்’ என்று தெரிவித்தார்.

2 பெண்கள் கைது

இதுதொடர்பாக முருகானந்தத்தின் மனைவி சுஷ்மிதாபிரியாவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் மகாலட்சுமியை வெந்நீர் ஊற்றி கொடுமைப்படுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து சுஷ்மிதா

பிரியாவையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது அக்காள் மகள் மித்திராஜ் (21) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் சுஷ்மிதாபிரியா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

மகனுக்கு பாலியல்தொல்லை

எங்கள் வீட்டில் தங்கி வேலை செய்து வந்த மகாலட்சுமி எங்கள் 10 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் மகாலட்சுமியை பல முறை கண்டித்துள்ளேன். இதேபோன்று கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் எனது மகனிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த நான் மகாலட்சுமி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி விட்டேன். 

இதில் உடலில் வெந்நீர் பட்டு மகாலட்சுமி காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தால் வி‌ஷயம் வெளியே தெரிந்துவிடும் என்பதால், வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்தோம். ஆனால் மகாலட்சுமி சிகிச்சை பலன்அளிக்காமல் இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகாலட்சுமிக்கு வீட்டில் சிகிச்சை அளித்தவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முருகானந்தத்திடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story