பெரம்பலூர்-அரியலூரில் கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர்-அரியலூரில் கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2018 11:00 PM GMT (Updated: 6 July 2018 6:58 PM GMT)

பெரம்பலூர்-அரியலூரில் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கூட்டமைப்பு சார்பாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் மேகநாதன், பொருளாளர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பொது வினியோக திட்டத்திற்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாத்திட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் படி நியாய விலை கடை ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் சரக்கு இருப்பு குறைவிற்கு ஊழியர்களிடம் அபராத தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும். ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். குடும்ப அட்டைகளுக்கு மாறாக வழங்கப்பட்டுள்ள மின்னணு அட்டைகளில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும். நியாய விலைக் கடைகளில் அடிப்படை வசதிகளான குறிப்பாக கிடங்கு வசதி, மின் இணைப்பு, கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்பிடும் போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை பெற்று பணியமர்த்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கருப்பையா, விருதகிரி, பொன்னுசாமி, ராஜாராம், நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் சம்பந்தம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நியாய விலைக்கடை ஊழியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வாட்சன் நன்றி கூறினார்.

Next Story