புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கொத்தனார் பலி டிரைவர் கைது


புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கொத்தனார் பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 6 July 2018 10:30 PM GMT (Updated: 6 July 2018 7:21 PM GMT)

புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது50). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் ஊரில் இருந்து வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் நான்கு வழிசாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ராஜேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story