கடிதம் எழுதும் போட்டி வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை பரிசு


கடிதம் எழுதும் போட்டி வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை பரிசு
x
தினத்தந்தி 6 July 2018 10:30 PM GMT (Updated: 6 July 2018 7:35 PM GMT)

எனது தாய்நாட்டுக்கு கடிதம் என்கிற தலைப்பில் நடைபெறும் கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை பரிசு வழங்கப்பட இருப்பதாக கரூர் அஞ்சல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

கரூர்,

கரூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் மைக்கேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடந்த ஆண்டு இந்திய அளவில் “மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதும்” போட்டி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு கடிதம் எழுதும் போட்டியை உலக அளவில் நடத்த இந்திய அஞ்சல்துறை முடிவு எடுத்து உள்ளது. இந்த போட்டிக்கான தலைப்பு “என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” என்பதாகும். இந்த போட்டி கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த கடிதங்களை அனுப்ப கடைசி நாள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடிதங்களை ஸ்கேன் செய்து “மை கவ் போர்ட்டல்”என்கிற அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். எனினும் தபாலில் செப்டம்பர் 30-க்கு முந்தைய தேதி முத்திரையுடன் கூடிய கடிததை கட்டாயம் அனுப்ப வேண்டும்.


ரவீந்திரநாத்தாகூரின் “ஆமோர் தேஷேர் மாதி” என்கிற பெங்காலி மொழி தேசபக்திபாடலின் அடிப்படையில், “என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” என்கிற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தை தமிழ், ஆங்கிலம், இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுத வேண்டும். பின்னர் முதன்மை அஞ்சல்துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல் அஞ்சல்துறை கடிதபோட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். 18 வயது வரை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்லாண்டு லெட்டர் பிரிவு, என்வலப் பிரிவில் கடித போட்டி நடக்கிறது.

என்வலப் பிரிவில் எழுதுவோர் ஏ-4 அளவு வெள்ளை தாளில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவேர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையின் மூலம் எழுதப்பட்டவை மட்டுமே போட்டிக்கு ஏற்று கொள்ளப்படும். இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரமும் என வழங்கப்படுகிறது. மேலும் அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.25 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கு பெறுவோர் கடிதத்தின் மேல் 1-1-2018 அன்று என் வயது 18-க்கு மேல், 18-க்கு கீழ் என சான்றளிக்கிறேன் என்ற வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும். வெற்றிபெறும் போட்டியாளரின் வயது சான்று பரிசோதிக்கப்பட்ட பின்னரே பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Next Story