நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் கிராம நிர்வாக அலுவலர் பலி மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம்


நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் கிராம நிர்வாக அலுவலர் பலி மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 6 July 2018 11:00 PM GMT (Updated: 6 July 2018 8:23 PM GMT)

நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கிராம நிர்வாக அலுவலர் பலியானார். மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.


பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ராசிகுமரிப்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தாகவுண்டர். இவருடைய மகன் ராஜசேகர்(வயது 31). இவர் மோகனூர் அருகே உள்ள பேட்டைப்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமத்தி வேலூரில் இருந்து மோகனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஓலப்பாளையம் அருகே சென்ற போது சாலையோரத்தில் நின்றிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிளுடன் மோதினார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் இறந்த கிராம நிர்வாக அலுவலருக்கு மதுமதி என்ற மனைவியும், ரித்திகா என்ற ஒரு வயது குழந்தையும் இருக்கிறார்கள்.


பரமத்திவேலூர் அருகே ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி(40). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பரமத்திவேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு செல்லும் போது ஓலப்பாளையத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த அதே டிராக்டரில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2 விபத்துகளையும் பரமத்திவேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story