மைசூரு மிருகக்காட்சி சாலையை ஒட்டியுள்ள திப்பையன ஏரியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்


மைசூரு மிருகக்காட்சி சாலையை ஒட்டியுள்ள திப்பையன ஏரியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 6 July 2018 10:00 PM GMT (Updated: 6 July 2018 9:30 PM GMT)

மைசூரு மிருகக்காட்சி சாலையை ஒட்டியுள்ள திப்பையன ஏரியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக உயிரியல் பூங்கா உறுப்பினர் தெரிவித்தார்.

மைசூரு,

மைசூரு மிருகக்காட்சி சாலையை ஒட்டியுள்ள திப்பையன ஏரியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக உயிரியல் பூங்கா உறுப்பினர் தெரிவித்தார்.

திப்பையன ஏரி

மைசூரு அரண்மனை அருகே வன உயிரியல் பூங்கா (மிருகக்காட்சி சாலை) உள்ளது. இந்த பூங்காவை கடந்த 1892–ம் ஆண்டு அப்போதைய மைசூரு மன்னர் சாமராஜ உடையார் அமைத்தார். சுமார் 10 ஏக்கரில் இந்த பூங்கா முதலில் அமைக்கப்பட்டது. கோடை காலத்தில் அவர் இந்த பூங்காவில் தங்கி பொழுதை கழித்தார். இந்த பூங்கா தற்போது 157 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது. இந்த உயிரியல் பூங்காவில் அரியவகை பல வனவிலங்குகள், பறவை இனங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் ஒரு பகுதியில் காரஞ்சி ஏரி அமையப் பெற்றுள்ளது.

இந்த ஏரி பறவைகளின் வேடந்தாங்கலாக காட்சி அளிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் வசந்தகால பறவைகள் இங்கு கூடு கட்டி குஞ்சி பொரித்து செல்வதை காணலாம். அத்துடன் நீர்ப்பறவைகளின் புகலிடமாகவும் இந்த ஏரி திகழ்க்கிறது. இந்த ஏரியின் அருகிலேயே சுமார் 30 ஏக்கரில் திப்பையன ஏரியும் உள்ளது. புல்வெளி பகுதி, வனப்பகுதி, சதுப்பு நில பகுதி என 3 வகையாக இந்த ஏரி பகுதி காணப்படுகிறது. தற்போது இந்த ஏரியில் உள்ள தண்ணீர் குளித்து மகிழவும், கூடு கட்டி வசிக்கவும் ஏராளமான அரிய வகை பறவைகள் இங்கே வந்த வண்ணம் உள்ளது.

ஆய்வு

ஆனால் திப்பையன ஏரி பகுதி முறையாக பராமரிக்காமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இந்த ஏரியை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகளும், வன ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஏரியை, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மைசூரு உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இதைதொடர்ந்து இந்த திப்பையன ஏரியை சுத்தப்படுத்தி, மேம்படுத்த மைசூரு உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. தனியார் பங்களிப்புடன் இந்த ஏரியை மேம்படுத்தப்பட உள்ளது.

இதையடுத்து அந்த ஏரியை கர்நாடக உயிரியல் பூங்கா வாரிய செயற்குழு உறுப்பினர் பி.பி.ரவி சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் உயிரியல் பூங்கா அதிகாரிகளும், வனத்துறையினரும் இருந்தனர்.

விரைவில் மேம்பாட்டு பணிகள்

இதுபற்றி பி.பி.ரவி கூறுகையில், காரஞ்சி ஏரியில் இருந்து தற்போது திப்பையன ஏரிக்கும் ஏராளமான பறவைகள் வந்து தங்கியுள்ளன. இதனால் திப்பையன ஏரியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். தனியார் பங்களிப்புடன் இந்த ஏரியை கர்நாடக உயிரியல் பூங்கா வாரியம் புதுப்பிக்க உள்ளது. இதற்காக அரசிடமும் நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்படும். இந்த ஏரியை சுற்றி நடைப்பயிற்சி செய்ய ஏதுவாக சாலை அமைக்கப்படும். இந்த சாலை சிமெண்டு பயன்படுத்தி அமைக்கப்படாது. சரளை மணல் மூலம் இந்த சாலை அமைக்கப்படும். அத்துடன் ஏரிக்கரையில் மருத்துவக்குணம் கொண்ட மூலிகை செடிகள், மலர்செடிகள் என 1,500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த ஏரியில் மீன் வளர்ப்பு தொழில் செய்யவும் வாரியம் முடிவு செய்துள்ளது. சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மீன்கள் இந்த ஏரியில் வளர்க்கப்படும். இன்னும் 3 ஆண்டுகள் இந்த மேம்பாட்டு பணிகளை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, அந்த தண்ணீரை பறவைகள் குடிக்கும் வகையில் சுத்தப்படுத்தப்படும். இந்த ஏரி பகுதி மேம்படுத்தப்பட்டு, பறவைகள் வசிக்கும் சூழலுக்கு மாற்றப்படும். மேலும் காரஞ்சி ஏரியை போல் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்படும். இதுதவிர குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவும் இங்கே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story