ஜூகு கடலில் மூழ்கிய 3 வாலிபர்களின் உடல்கள் மீட்பு ஒருவரை தேடும் பணி நடக்கிறது


ஜூகு கடலில் மூழ்கிய 3 வாலிபர்களின் உடல்கள் மீட்பு ஒருவரை தேடும் பணி நடக்கிறது
x
தினத்தந்தி 6 July 2018 11:30 PM GMT (Updated: 6 July 2018 10:22 PM GMT)

ஜூகு கடலில் மூழ்கிய 3 வாலிபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

மும்பை, 

ஜூகு கடலில் மூழ்கிய 3 வாலிபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

கடலில் மூழ்கிய வாலிபர்கள்

மும்பை அந்தேரி, டி.என்.நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று முன்தினம் மாலை ஜூகு கடற்கரைக்கு வந்தனர். இதில் நண்பர்கள் பர்தீன் சவுதாகர்(வயது17), பைசல்(17), சோகைல், நசீர் காஜி ஆகியோர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது அடித்த ராட்சத அலையில் வாலிபர்கள் 4 பேரும் கடலில் மூழ்கினர்.

இதை கரையில் இருந்து அவர்களின் நண்பர் வாசிம் கான் (17) கவனித்தார். உடனடியாக அவர் கடலில் இறங்கி நண்பர்களை காப்பாற்ற முயன்றார். இதில், அவரும் கடலில் மூழ்கினார்.

இதைக்கண்ட உயிர்காக்கும் வீரர்கள் உடனடியாக கடலில் குதித்து வாசிம் கானை உயிருடன் மீட்டனர். மற்ற 4 பேரையும் அவர்களால் மீட்க முடியவில்லை.

3 உடல்கள் மீட்பு

இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடலில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு நசீர் காஜி பிணமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து தேடும் பணி நேற்று காலையும் நடந்தது. இந்த பணியில் கடற்படை, கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் கடற்படை நீச்சல் குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் நேற்று காலை, நீரில் மூழ்கிய 2 வாலிபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடலில் மூழ்கிய ஒரு வாலிபரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story