பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள் அமைச்சர்கள், அனைத்து கட்சியினர் மரியாதை


பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள் அமைச்சர்கள், அனைத்து கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 6 July 2018 10:45 PM GMT (Updated: 6 July 2018 10:45 PM GMT)

பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள், பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் உள்ள பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் அவரது 148-வது பிறந்த நாள் விழா தமிழகஅரசு சார்பில் கொண்டாடப்பட்டது. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் பரிதிமாற் கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், சரவணன், முன்னாள் திருப்பரங்குன்றம் யூனியன் முன்னாள் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சோனாபாய், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா பரிதிமாற் கலைஞருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி, முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் சாமிவேல், ஜாபரூல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் கணபதி சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் பசுமலை அழகர், அவைத்தலைவர் தனபாண்டி ஒன்றிய செயலாளர் கருப்பு வைரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அகில இந்திய மருது பாண்டியர் பேரவை சார்பில் அதன் மாநில தலைவர் ஆலங்குளம் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விளாச்சேரி முனியாண்டிபுரத்தில் உள்ள 3 ஜி. மெட்ரிகுலேசன் பள்ளி, திருநகர் மகாத்மா காந்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story