கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2018 10:00 PM GMT (Updated: 6 July 2018 10:53 PM GMT)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட செயல் தலைவர் சோமசுந்தரம், நியாய விலைக்கடை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட இணைச்செயலாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளி்ல் எடையாளரை நியமிக்க வேண்டும்.

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து கடைகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் எடை குறைவில்லாமல் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும். ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

இதில் தொ.மு.ச. மாவட்ட தலைவர் குருநாதன், மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் தமிழரசன், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட கவுரவ செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story