தாம்பரம்-நெல்லை இடையே இயக்கப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூரில் நின்று செல்லுமா? திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி பேட்டி


தாம்பரம்-நெல்லை இடையே இயக்கப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூரில் நின்று செல்லுமா? திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி பேட்டி
x
தினத்தந்தி 7 July 2018 10:15 PM GMT (Updated: 7 July 2018 6:34 PM GMT)

தாம்பரம்-நெல்லை இடையே இயக்கப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூரில் நின்று செல்லுமா? என்ற கேள்விக்கு திருச்சிகோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி பதில் அளித்துள்ளார்.

கடலூர்,

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி திருச்சியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் நேற்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் ரெயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டார்.

அப்போது அங்கு ஆக்கிரமிப்புகள் இருந்ததை பார்வையிட்டு உடனடியாக அதனை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரெயில்வே குடியிருப்பு, பயணிகள் ஓய்வறை ஆகியவற்றையும் உதயகுமார் ரெட்டி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் தனியார் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ரெயில் நிலையத்தை சுற்றிலும் சுற்றுசுவர் அமைக்க இருக்கிறோம். நகராட்சி நிர்வாகம் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பைகளை கொட்டுகிறது. ரெயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தற்போதுள்ள 2 டிக்கெட் கவுண்டர்களில் ஒன்றை புதிய கட்டிடத்துக்கு மாற்ற இருக்கிறோம். பொதுமக்கள் விரும்பும் வகையில் ரெயில் நிலையத்தை மாற்றி அமைக்க உள்ளோம்.ரெயில்வே இடத்தை நமது சொந்த இடமாக நினைத்து பொதுமக்கள் செயல்பட வேண்டும். மேலும் இந்த ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் அறைகளை 2 வாரத்துக்குள் புனரமைத்து பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்படும். ரெயில் நிலையத்துக்கு தற்போது நகராட்சி நிர்வாகம் குடிநீர்வினியோகம் செய்யவில்லை. இதனால் 3 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தானியங்கி குடிநீர் எந்திரம் அமைக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


அப்போது அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர், சிதம்பரம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உதயகுமார் ரெட்டி, அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர், சிதம்பரம் ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை ரெயில்வே வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது. ரெயில் நின்று செல்வது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார். அப்போது மூத்த கோட்ட மேலாளர்(இயக்கம்) பிரசன்னா, கோட்ட பொறியாளர்(கிழக்கு) பன்னீர்செல்வம், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் அருண்தாமஸ், கோட்ட பொறியாளர்(மின் பிரிவு) ஜெயராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் புறப்பட்டு விழுப்புரம் சென்றார்.


கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமையில் கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூர்-திருச்சி பயணிகள் ரெயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Next Story