தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை


தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 July 2018 10:30 PM GMT (Updated: 7 July 2018 6:38 PM GMT)

தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட பழைய ஆஸ்பத்திரி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுக்குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரிதும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் கோவிந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண்கள், தங்கள் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பழுதான கைப்பம்புகள் மற்றும் தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள், பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story