அரியலூரில் நாளை தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்


அரியலூரில் நாளை தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 7 July 2018 10:15 PM GMT (Updated: 7 July 2018 7:08 PM GMT)

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் வாரம் நாளை முதல் (திங்கட்கிழமை) முதல் 13-ந்தேதி வரை சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் வாரம் நாளை முதல் (திங்கட்கிழமை) முதல் 13-ந்தேதி வரை சிறப்பாக நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வாயிலாக நடைபெறும் தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளின் விவரங்கள் வருமாறு:-

நாளை தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் வாரத்திற்கான ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தொடங்கி வைத்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்குகிறார். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற விதவை ஆகிய முன்னுரிமை உடையவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியும், 11-ந்தேதி மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 12-ந்தேதி பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் பயிற்சியும், 13-ந்தேதி தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சிகள் வழங்குவது குறித்து தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பொது மக்களுடன் தொழில்முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. எனவே, மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story