கருத்துவேறுபாடின்றி மலைவாழ் மக்களுக்கு சாலை அமைத்துதருவோம் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு


கருத்துவேறுபாடின்றி மலைவாழ் மக்களுக்கு சாலை அமைத்துதருவோம் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 8:20 PM GMT)

கருத்துவேறுபாடு இல்லாமல் அணைக்கட்டு தொகுதியில் மலைவாழ் மக்களுக்கு சாலை அமைத்து தருவோம் என தி.மு.க.எம்.எல்.ஏ. பங்கேற்ற விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகாவில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை, நிலப்பட்டா, அவர்களது குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சாதிச்சான்று ஆகியவை வழங்கும் விழா அணைக்கட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி, தலைமையிடத்து துணை தாசில்தார் காமாட்சி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தருமலிங்கம், ரமேஷ் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆவின் தலைவர் வேலழகன் வரவேற்றார். உதவி கலெக்டர் செல்வராசு, கலால் உதவி ஆணையர் பூங்கொடி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்

சிறப்பு அழைப்பாளர்களாக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் (தி.மு.க.)ஆகியோர் கலந்து கொண்டு 434 பேருக்கு சுமார் ரூ.3½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது அமைச்சர் கே.சி. வீரமணி பேசியதாவது:-

சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நந்தகுமார் பேசும்போது, “இந்த விழாவை மலை கிராமத்தில் நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கலாம்”என்றார். மூன்று கிராம மக்களையும் ஒன்றாக வரவழைத்து விழா நடத்துவது மிகவும் கடினம். எனவே தாலுகா அலுவலகத்தில் இந்த விழாவை நடத்திவிடலாம்” என்று கூறினேன்.

நாம் தான் (தி.மு.க., அ.தி.மு.க.) கருத்து வேறுபாட்டுடன் உள்ளோம். அதை களைந்து விட்டு வாருங்கள். நாம் இருவரும் கூட்டாக சேர்ந்து அணைக்கட்டு தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்களை செயல்படுத்துவோம். மலைவாழ் மக்களுக்கு சாலை அமைத்து தருவோம்.

இவ்வாறு பேசினார். 

Next Story