கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் புதர் மண்டி கிடக்கும் வைரவன் வாய்க்கால்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் புதர் மண்டி கிடக்கும் வைரவன் வாய்க்கால்
x
தினத்தந்தி 7 July 2018 11:30 PM GMT (Updated: 7 July 2018 11:17 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வைரவன் வாய்க்கால் புதர் மண்டி கிடக்கிறது.

கூடலூர்,

தேனி மாவட்டம், கம்பம் பள்ளதாக்கு பகுதிகள் முல்லைப்பெரியாறு அணை தண்ணீரின் மூலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் இந்த பகுதிகளில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர்் லோயர்கேம்ப், கூடலூர், கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, உப்புக்கோட்டை, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகள் வழியாக வைகை அணைக்கு சென்றடைகிறது. இதில் லோயர்கேம்பில் உள்ள வைரவன் வாய்க்காலில் இருந்து தனி கால்வாய்கள் அமைத்து வரத்து வாய்க்கால்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இதன்மூலம் கப்பாமடை, தாமரைகுளம், பாரவந்தான், ஒழுகுவழி ஆகிய பகுதிகளில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் பொதுப்பணித்துறையினர் வாய்க்கால்கள், கண்மாய்களை சீரமைத்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீரமைப்பு பணிகளை செய்வதில்லை.

இதனால் இப்பகுதி விவசாயிகளே ஒருங்கிணைந்து வாய்கால்களை சீரமைத்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு வைரவன் வாய்காலை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நிதி ஒதுக்கீடு செய்தனர். அதன்படி குருவனத்து பாலம் முதல் சட்ரஸ் வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள அரசு விதைபண்ணை வரை மட்டுமே கால்வாய் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து உள்ளது. பாரவந்தான், ஒழுகுவழி, சட்ரஸ் வரை 2 கிலோ மீட்டர் தூரம் சீரமைப்பு பணிகள் செய்யாமல் பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் செடி, கொடிகள், முட்புதர்கள் அதிகம் வளர்ந்து தண்ணீர் வரும் பாதைகளை அடைத்து புதர் மண்டி கிடக்கிறது.

இதனால் பாசனத்துக்கு வரும் தண்ணீர்் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எனவே பாதியில் விடப்பட்ட வைரவன் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story