ஒரு மரணமும்.. உதவும் உள்ளமும்..


ஒரு மரணமும்.. உதவும் உள்ளமும்..
x
தினத்தந்தி 8 July 2018 10:49 AM GMT (Updated: 8 July 2018 10:49 AM GMT)

கொலை செய்யப்பட்ட லாரி டிரைவரின் குடும்பத்திற்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி தன்னுடைய சம்பளத்தில் பாதி தொகையை வழங்குகிறார்.

வழிப்பறி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட லாரி டிரைவரின் பிள்ளைகளின் படிப்பிற்காகவும், குடும்ப செலவுக்காகவும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய சம்பளத்தில் பாதி தொகையை வழங்கிக் கொண்டிருக்கிறார். அந்த போலீஸ் அதிகாரி பெயர் அஸ்லாம் கான். டெல்லியில் பணிபுரிந்து வருகிறார். இறந்த லாரி டிரைவர் பெயர் சர்தார் மான் சிங். அவரது குடும்பம் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் வசிக்கிறது.

மான் சிங் லாரி ஓட்டிய வருமானம் மூலம் தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக 80 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்திருக்கிறார். அந்த தொகையுடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். வரும் வழியில் வழிப்பறி கொள்ளையர்கள் அவரை வழிமறித்து கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். அவர்களின் பிடியில் இருந்து மீள முடியாமல் படுகாயமடைந்து இறந்துபோய்விட்டார்.

அவருடைய வருமானத்தை நம்பி வாழ்ந்த குடும்பம் நிலை குலைந்து போனது. அவரது பிள்ளைகள் பல்ஜித் கவுர், ஜஸ்மித்கவுர், அஸ்மித் கவுர் ஆகியோரின் படிப்பும் கேள்விக்குறியானது. இதை அறிந்த ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்லாம் கான், மான்சிங்கின் குடும்பத்திற்கு உதவ முன் வந்திருக்கிறார். அதுபற்றி பல்ஜித் கவுர் சொல்கிறார்.

‘‘தந்தையின் இழப்பு எங்கள் குடும்பத்தை நிலைகுலைய வைத்துவிட்டது. எங்களது கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு அடுத்து என்ன செய்ய போகிறோம். எப்படி படிக்க போகிறோம் என்று தெரியாமல் தவித்துபோனோம். அப்போது டெல்லியில் இருந்து அஸ்லாம் கான் எங்களை தொடர்பு கொண்டு பேசினார்.

எங்களின் நிலைமையை கேட்டறிந்தவர், ஒவ்வொரு மாதமும் உங்கள் தேவைக்காக பணம் அனுப்புகிறேன் என்று கூறினார். அரசின் சார்பில் உதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். சொன்னது போலவே பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறார். அடிக்கடி போன் செய்து என் படிப்பு பற்றி விசாரிக்கிறார்.

குறுந்தகவல்கள் மூலம் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவருடைய ஆறுதல் எங்களுக்கு ஊக்கத்தை தந்திருக்கிறது. ஒருகட்டத்தில், நீங்கள் எங்களுக்கு செய்த உதவி போதும் என்று கூறினோம். ஆனால் அவர் கேட்கவில்லை. அவர் காட்டும் அன்பு எங்கள் கவலைக்கு ஆறுதலாக இருக்கிறது’’ என்கிறார். 

Next Story