மாநிலம் முழுவதும் போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்க மனநல ஆலோசகர்கள் நியமனம் மனஉளைச்சலில் இருந்து விடுபட நடவடிக்கை


மாநிலம் முழுவதும் போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்க மனநல ஆலோசகர்கள் நியமனம் மனஉளைச்சலில் இருந்து விடுபட நடவடிக்கை
x
தினத்தந்தி 8 July 2018 10:00 PM GMT (Updated: 8 July 2018 7:16 PM GMT)

மனஉளைச்சலில் இருந்து விடுபட மாநிலம் முழுவதும் போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்க 40 மனநல ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு, 

மனஉளைச்சலில் இருந்து விடுபட மாநிலம் முழுவதும் போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்க 40 மனநல ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

போலீஸ் துறையில் மன உளைச்சல்

போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் தொல்லை, அதிகநேர பணி, விடுப்பு இல்லாமை, ஊதியம் குறைவு உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிலர் பணியை ராஜினாமா செய்வதுடன், இன்னும் சிலர் தற்கொலையும் செய்து விடுகிறார்கள். இதற்கு கர்நாடகத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்களும், போலீஸ் அதிகாரிகளும் விதி விலக்கல்ல.

சமீபத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகளான கணபதி, கல்லப்பா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். அனுபமா செனாய் உள்பட மேலும் சிலர் தங்களின் பணியை ராஜினாமா செய்தனர். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு விடுப்பு கொடுக்கவில்லை என்பதால் ராஜனகுண்டே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரை, அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் ஆனந்த்குமார் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவமும் நடந்துள்ளது. இதுபோன்ற காரணங்களுக்கு அவர்களின் மனஉளைச்சல் தான் காரணமாகும்.

மனநல ஆலோசகர்கள் நியமனம்

இந்த நிலையில் போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களின் மனஉளைச்சலை போக்கி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க மாநில அரசும், போலீஸ் துறையும் முடிவு செய்தது. இதற்காக 40 மனநல ஆலோசகர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட ஆயுதப்படை போலீஸ் அலுவலகம், போக்குவரத்து போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு, போலீஸ் மண்டல அலுவலகம் உள்பட ஒவ்வொரு பகுதிக்கும் சென்று போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக போலீஸ் நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பரசிவமூர்த்தி கூறுகையில், ‘போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் 40 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். போலீஸ் துறையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக அவர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள். இதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இதன்மூலம், போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் அவர்களின் குடும்பம் பயன்பெறும். விரைவில் 2-வது கட்டமாகவும் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்‘ என்றார்.

Next Story