வியாபாரிகளிடம் ரூ.2 கோடிக்கு மேல் மோசடி


வியாபாரிகளிடம் ரூ.2 கோடிக்கு மேல் மோசடி
x
தினத்தந்தி 8 July 2018 10:00 PM GMT (Updated: 8 July 2018 8:36 PM GMT)

ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வியாபாரிகளிடம் ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது புகார்கள் குவிந்து வருகிறது.

கோவை,

ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த வியாபாரி ரியாஸ். இவர் அரிசி மற்றும் புளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பொருட்களை அனுப்பி வைப்பது வழக்கம். இந்த நிலையில் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோபி மற்றும் 5 பேர் புளி அனுப்பி வைக்குமாறு ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தனர்.

இதை நம்பி ரியாஸ் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புளியை அனுப்பி வைத்தார். ஆனால் புளியை பெற்றுக் கொண்டு அதற்கான பணம் தராமல் ஏமாற்றினர். இது குறித்து கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் ரியாஸ் புகார் செய்தார். இது குறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில், உதவி கமிஷ னர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் சுலைகா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த மோசடி தொடர்பாக கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோபி (வயது35), மகேஷ்(43), விமல் (27), சஞ்சய் (23), சாய்பாபாகாலனியை சேர்ந்த மளிகை வியாபாரி சிவராஜ் (41) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராமமூர்த்தி(45) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோபி உள்பட 5 பேர் கைதானது குறித்த தகவல் தெரிந்ததும், கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார்கள் குவிந்து வருகிறது.

அதன்படி, மதுரையை சேர்ந்த சரவணன் என்ற வியாபாரியிடம் ரூ.31 லட்சத்து 28 ஆயிரத்துக்கு நவ தானியங்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுபோல் மதுரையை சேர்ந்த மிளகு வியாபாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்துள்ளனர். வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் உள்பட மொத்தம் 21 வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கிக்கொண்டு ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக பலர் புகார் செய்தனர்.

இது குறித்து நகர குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், தலைமறைவான மேலும் ஒருவரை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

வியாபாரிகளிடம் பொருட் களை வாங்கி பணம் கொடுக் காமல் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story