காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 8 July 2018 11:00 PM GMT (Updated: 8 July 2018 9:00 PM GMT)

ஒகேனக்கல், மேச்சேரியில் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எர்ரங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவருடைய மகன் சிவலிங்கம் (வயது 19). இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் சிவலிங்கம் தனது நண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் அவர்கள் அனைவரும் சாரணர் கட்டிடம் பகுதிக்கு சென்றனர். அங்கு நண்பர்கள் அனைவரும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்து கொண்டு இருந்தனர். அப்போது மாணவர் சிவலிங்கம் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் சிவலிங்கத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கூனாண்டியூரில் காவிரி ஆற்றில், மேட்டூர் அணையின் நீர்தேக்கப்பகுதி உள்ளது. மேச்சேரி அருகே மல்லிக்குந்தம் குப்பக்காளிப்பட்டி பாட்டன் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான தங்கமணி(வயது 45), அவரது தம்பி மகன் கார்த்தி(20) மற்றும் உறவினர்கள் என 7 பேர் நேற்று ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது மாலை 3 மணி அளவில் கார்த்தி காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்த போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. நீரில் மூழ்கிய அவர் கூக்குரலிட்டார். இதை பார்த்த அவரது பெரியப்பா தங்கமணி, கார்த்தியை காப்பாற்ற சென்றார். அவரும் நீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் அலறினார்கள். பின்னர் இது குறித்த தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு வீரர்கள், மேச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனர்.

பின்னர் பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

Next Story