பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை குழந்தை இறந்து பிறந்ததால் விபரீத முடிவு


பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை குழந்தை இறந்து பிறந்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 8 July 2018 10:15 PM GMT (Updated: 8 July 2018 9:05 PM GMT)

கிருஷ்ணகிரியில் குழந்தை இறந்து பிறந்ததால் மனமுடைந்த பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டை கொத்தபேட்டா காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தேன்மொழி (வயது 38). இவர் திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் தேன்மொழி மீண்டும் கர்ப்பமானார். கடந்த 5.3.2018 அன்று அவருக்கு பிரசவம் நடந்தது. அப்போது குழந்தை இறந்து பிறந்தது. அன்று முதல் தேன்மொழி மனமுடைந்து காணப்பட்டார். குழந்தை இறந்த மனவேதனையில் காணப்பட்ட தேன்மொழி கடந்த 3-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தேன்மொழியின் தாய் சிவகாமி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story