கால்நடைகளுக்கு சிசிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்


கால்நடைகளுக்கு சிசிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 8 July 2018 11:00 PM GMT (Updated: 8 July 2018 9:28 PM GMT)

தமிழ்நாட்டில் மேலும் 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தளி, 

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளபாளையத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ரேக்ளா போட்டியை நடத்தினார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் மற்றும் காளைகள் கொண்டு வரப்பட்டன. ரேக்ளா போட்டியை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்தனர்.

போட்டிகளின் தூரம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிக்கு சி.மகேந்திரன் எம்.பி., முன்னிலை வகித்தார். போட்டியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

ஒலி பெருக்கி மூலம் காளையின் உரிமையாளர் மற்றும் ஊரை சொல்லி ஒவ்வொரு ரேக்ளா வண்டியாக போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஒன்றன்பின் ஒன்றாக ரேக்ளா வண்டிகள் களத்தில் இறக்கப்பட்டது. போட்டியின் தொடக்கத்தில் கொடியசைத்ததும் காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. அப்போது பார்வையாளர்களும் உற்சாக குரல் எழுப்பினார்கள். போட்டி தொடங்கிய இடம் முதல் முடியும் பகுதி வரை இருபுறமும் கயிறு கட்டப்பட்டு இருந்தது. உற்சாக மிகுதியால் ரேக்ளா வண்டி பாய்ந்து செல்லும் பாதைக்குள் பார்வையாளர்கள் புகுந்து விடக்கூடாது என்பதற்கான இந்த முன்ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய ரேக்ளா போட்டி மாலை 6 மணி வரையில் நடைபெற்றது.

போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உடுமலை-மூணாறு சாலையில் ரேக்ளா போட்டி நடைபெற்றதை யொட்டி அமராவதி மற்றும் மூணாறுக்கு செல்லும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை வழியாக திருப்பி விடப்பட்டன. ரேக்ளா போட்டியை முன்னிட்டு தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கால்நடைத்துறையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ரேக்ளா போட்டிகள் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களின் போது நடத்தப்படுகிறது. அப்போது மாடுகளுக்கு ஏற்படுகின்ற காயங்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கும் பொருட்டு இங்கு அனைத்து வகையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 5 மாவட்டங்களில் கால்நடை நடமாடும் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது.

தற்போது கூடுதலாக 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ மனை என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடக்கி வைக்க உள்ளார். அதன்படி 22 மாவட்டங்களில் கால்நடைகளின் இருப்பிடங்களுக்கு சென்று சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடமாடும் ஆம்புலன்சில் செய்யப்பட்டுள்ளது. அதில் நோய்வாய்ப் பட்டுள்ள மாடுகளை தூக்கி சிகிச்சை அளிப்பதற்காக லிப்ட் நவீன எந்திரங்கள் மற்றும் ஸ்கேன் வசதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story