4-வதும் பெண் குழந்தை பெறுவார் என கருதி காதல் மனைவியை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு வலைவீச்சு மாமனார், மாமியார் கைது


4-வதும் பெண் குழந்தை பெறுவார் என கருதி காதல் மனைவியை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு வலைவீச்சு மாமனார், மாமியார் கைது
x
தினத்தந்தி 8 July 2018 11:00 PM GMT (Updated: 8 July 2018 10:51 PM GMT)

4-வதும் பெண் குழந்தை பெறுவார் என கருதி காதல் மனைவியை வாலிபர் வெட்டி கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புனே,

4-வதும் பெண் குழந்தை பெறுவார் என கருதி காதல் மனைவியை வாலிபர் வெட்டி கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

காதல் தம்பதிகள்

புனே வட்காவ் மாவல் தாலுகாவில் உள்ள சஜன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் யாஷ் (வயது35). இவரது மனைவி மனிஷா (34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் மனிஷா கர்ப்பமானார். அவரது வயிற்றில் நான்காவதாகவும் பெண் குழந்தை வளர்வதாக கருதி யாஷ், அவரது தந்தை சாது சங்கர், தாய் அஞ்சனா மூன்று பேரும் சேர்ந்து மனிஷாவை துன்புறுத்தி வந்துள்ளனர். சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் சண்டை உண்டானது.

மனைவி கொலை

அப்போது, கோபம் அடைந்த யாஷ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் மனிஷாவின் தலையில் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

இதனால் பயந்து போன யாஷ் அங்கிருந்து ஓடி விட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் மனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மனிஷாவின் மாமனார், மாமியார் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான யாஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story