கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி


கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 8:11 PM GMT)

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளர்ச்சித்துறையினர் 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், கடந்த 3-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வு நடத்தக்கூடாது. விடுமுறை நாட்களில் கள ஆய்வு செய்யக்கூடாது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங் களில் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பசுமை வீடுகள் கட்டும் பணி, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டும் பணி, பயனாளிகள் தேர்வு செய்யும் பணி உள்பட பல்வேறு பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டனர். இதற்காக தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று திரண்டனர். அங்கு இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

இதற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமதுஅலி ஜின்னா தொடங்கி வைத்தார். செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் தொடங்கி சிறிது தூரம் வந்த நிலையில் போலீசார் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி சிறிது தூரம் ஊர்வலம் சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 58 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Next Story