கல்லூரி பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; கோழிப்பண்ணை அதிகாரி சாவு மகன் படுகாயம்


கல்லூரி பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; கோழிப்பண்ணை அதிகாரி சாவு மகன் படுகாயம்
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 9:30 PM GMT)

ஆத்தூர் அருகே கல்லூரி பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் கோழிப்பண்ணை அதிகாரி பரிதாபமாக இறந்தார். மகன் படுகாயம் அடைந்தான்.

தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 40). இவர் கோழிப்பண்ணையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய மகன் விக்னேஷ்(12) திருச்சி மாவட்டம் வெங்டாசலபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று பெரியசாமி தனது மகன் விக்னேசை பள்ளிக்கூடத்தில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது ஆத்தூர் அருகே தோப்புமண்டி என்ற இடத்தில் சென்ற போது எதிரே செந்தாரப்பட்டியில் இருந்து சேலத்தை நோக்கி வந்த தனியார் கல்லூரி பஸ், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தோடு சுமார் 20 அடி தூரத்துக்கு மோட்டார் சைக்கிளையும் பஸ் இழுத்து கொண்டு சென்றது.

விபத்தை பார்த்ததும் கல்லூரி பஸ்சை ஓட்டிய டிரைவர் பூலாம்பாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெரியசாமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் விக்னேசை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தம்மம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு விக்னேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கல்லூரி பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள். 

Next Story