ஏ.சக்திவேல் தாயார் மறைவு: கேரள கவர்னர் நேரில் ஆறுதல்


ஏ.சக்திவேல் தாயார் மறைவு: கேரள கவர்னர் நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 9 July 2018 10:52 PM GMT (Updated: 9 July 2018 10:52 PM GMT)

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவரான ஏ.சக்திவேல் தாயார் மறைவுக்கு, கேரள கவர்னர் சதாசிவம் நேற்று திருப்பூர் வந்து அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருப்பூர், 

திருப்பூர் பாப்பீஸ் நிறுவனங்களை சேர்ந்த மறைந்த முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சி.எஸ்.ஆறுமுகத்தின் மனைவியும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் ஏ.சக்திவேலின் தாயாருமான ஏ.பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் திருப்பூர் கொங்குநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

மரணம் அடைந்த ஏ.பழனியம்மாளின் உடலுக்கு உறவினர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று முன்தினம் மாலை திருப்பூர் தெற்கு ரோட்டரி மின்மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

நேற்று காலை கேரள மாநில கவர்னர் சதாசிவம் தனது மனைவியுடன் கொங்குநகரில் உள்ள ஏ.சக்திவேலின் வீட்டுக்கு வந்து அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அங்கிருந்து கவர்னர் கார் மூலமாக கேரளா புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையையொட்டி திருப்பூர் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று காலை ஏ.சக்திவேலின் வீட்டுக்கு வந்து அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி, புறநகர் மாவட்ட செயலாளர் உடுமலை சண்முகவேலு மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர். இதுபோல் ஏ.சக்திவேலின் வீட்டுக்கு பல்வேறு கட்சியினர், தொழில் அதிபர்கள் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர். 

Next Story