ஊரக திறனாய்வு தேர்விற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ஊரக திறனாய்வு தேர்விற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 July 2018 10:15 PM GMT (Updated: 10 July 2018 7:35 PM GMT)

ஊரக திறனாய்வு தேர்விற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறியுள்ளார்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு ஊரக பகுதி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இத்திறனாய்வுதேர்வு எழுதுவதற்கு ஊரக பகுதிகளில் (கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்) அரசு அங்கீ காரம் பெற்ற பள்ளிகளில் 2018-2019-ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகள் தகுதி படைத்தவர்கள் ஆவர். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிட மிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.

தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய் சான்றிதழினை இணைத்து தேர்வு கட்டணம் ரூ.5 மற்றும் சேவை கட்டணம் ரூ.5 ஆக மொத்தம் ரூ.10-ஐ பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தலைமையாசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டணத்துடன் முதன்மை கல்வி அலு வலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (பெரம்பலூர் மற்றும் வேப்பூர்) சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தேர்விற்கு இன்று (புதன்கிழமை) முதல் 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு (50 மாணவிகள் மற்றும் 50 மாணவர்கள்) 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் காலத்திற்கு படிப்புதவி தொகை ஆண்டு தோறும் ரூ. ஆயிரம் வீதம் வழங்கப்படும். தேர்வெழுத வரும் தேர்வர்கள் கருப்பு மை பந்து முனை பேனாவினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story