தனிக்கட்சி தொடங்குவதா? அ.தி.மு.க.வில் இணைந்து வழிநடத்துவதா? தொண்டர்களிடம் கருத்து கேட்டார் ஜெ.தீபா


தனிக்கட்சி தொடங்குவதா? அ.தி.மு.க.வில் இணைந்து வழிநடத்துவதா? தொண்டர்களிடம் கருத்து கேட்டார் ஜெ.தீபா
x
தினத்தந்தி 10 July 2018 11:15 PM GMT (Updated: 10 July 2018 7:59 PM GMT)

தனிக்கட்சி தொடங்குவதா? அல்லது அ.தி.மு.க.வில் இணைந்து வழிநடத்துவதா? என கரூரில் தொண்டர்களிடம் ஜெ.தீபா கருத்து கேட்டார்.

கரூர்,

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கரூர் சுங்ககேட் பகுதியிலுள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.கே.துரைசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பொது செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டு, தீபா பேரவை என்கிற அமைப்பை வருங்காலத்தில் தேர்தலில் எந்த வகையில் ஈடுபடுத்தி கொள்வது? என்பது குறித்தும், தொண்டர்களின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது? என்பன உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தொண்டர்களாகிய நீங்கள் அழைத்ததால் தான் அரசியலுக்கு வந்தேன். இது உங்களுக்காக நான் எடுத்த முடிவு. ஜெயலலிதா இறப்பில் உள்ள சதிகள், சூழ்ச்சிகள், மர்மங்கள் என்ன? என்று இதுவரை தெளிவாகவில்லை. எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். சூழ்ச்சியாளர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியின் போது, தனிக்கட்சி தொடங்கி அ.தி.மு.க. தொண்டர்களை ஒருங்கிணைப்பதா? அல்லது எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை வழிநடத்துவதா? அல்லது தனிக்கட்சி தொடங்கி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதா? என்பதை தேர்வு செய்யும் வகையில் தொண்டர்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதில் தங்களது விருப்பத்தை தொண்டர்கள் மார்க் செய்து அளித்தனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

பின்னர் ஜெ.தீபா நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜ.க.வினர் தமிழகத்தை அவர்களது வீட்டு வேலைக் காரர்கள் போல் நடத்து கிறார்கள். பா.ஜ.க. ஆட்சி புரியும் மற்ற மாநிலங்களில் ஊழல்களே நடக்கவில்லையா? அதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும். அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளை திருத்தி பதவியேற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்வேன். ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே எனது நோக்கம். அதில் உறுதியாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story