நிதித்துறை செயலாளர் நடவடிக்கையால் அமைச்சர் கந்தசாமி அதிருப்தி, சட்டசபையில் ஆவேசம்


நிதித்துறை செயலாளர் நடவடிக்கையால் அமைச்சர் கந்தசாமி அதிருப்தி, சட்டசபையில் ஆவேசம்
x
தினத்தந்தி 10 July 2018 11:00 PM GMT (Updated: 10 July 2018 8:40 PM GMT)

நிதித்துறை செயலாளரின் நடவடிக்கையினால் அதிருப்தியடைந்த அமைச்சர் கந்தசாமி சட்டசபையில் ஆவேசமாக பேசினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை கூட்டத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம் நேற்று கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது எழுந்த அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிதித்துறை செயலாளர் தொடர்பாக ஒரு பிரச்சினையை கிளப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

அன்பழகன்: புதுவை பட்ஜெட்டில் சிறப்புக்கூறு திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 சதவீத நிதி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி பதில் அளிக்கும்போது, சிறப்புக்கூறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும், அதை பட்ஜெட்டில் சேர்க்க முதல்–அமைச்சர் கூறியதாகவும், ஆனால் நிதித்துறை செயலாளர் அதை புறக்கணித்துவிட்டார் என்றும் கூறினார். இதுதொடர்பாக நிதித்துறை செயலாளரிடம் விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சபாநாயகர் அவரை தனது அறைக்கு அழைத்து விசாரிக்கவேண்டும்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி: துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டபோது சிறப்புக்கூறு நிதியாக 16 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. துறை சம்பந்தமான மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் விரிவாக அதை கூறுவார். ஆதிதிராவிடர்களுக்கு 16 சதவீத நிதி வழங்குவதுதான் அமைச்சரவையின் முடிவு.

அமைச்சர் கந்தசாமி: சிறப்புக்கூறு நிதிக்கு முதல்–அமைச்சர் 16 சதவீத நிதியை ஒதுக்கினார். ஆனால் அதை நிதித்துறை செயலாளர் பட்ஜெட்டில் காட்டவில்லை. அவரை உங்கள் (சபாநாயகர்) அறைக்கு கூப்பிடுங்கள். அவருக்கு என்ன வானளாவிய அதிகாரமா உள்ளது?

தொடர்ந்து எழுந்த அன்பழகன் எம்.எல்.ஏ. நிதித்துறை செயலாளர் குறித்து பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் வைத்திலிங்கம், இப்போது எதுவும் முறைதவறி பேசவேண்டாம். மானியகோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசி முடிவெடுக்கலாம் என்று கூறி அடுத்த அலுவலுக்கு சென்றார்.


Next Story