தூத்துக்குடி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 17 துப்பாக்கிகளை ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை


தூத்துக்குடி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 17 துப்பாக்கிகளை ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை
x
தினத்தந்தி 11 July 2018 9:00 PM GMT (Updated: 11 July 2018 2:05 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 17 துப்பாக்கிகளை ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 17 துப்பாக்கிகளை ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

துப்பாக்கி சூடு 

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22–ந் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரித்து வருகின்றனர்.

ரசாயன பரிசோதனை 

இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட 17 துப்பாக்கிகள் மற்றும் காலி தோட்டாக்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த துப்பாக்கிகளை சென்னையில் உள்ள ரசாயன பரிசோதனை கூடத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (வியாழக்கிழமை) துப்பாக்கிகள் கொண்டு செல்லப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஏற்கனவே கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட, துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடைகள் ரசாயன பரிசோதனைக்காக நேற்று பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Next Story