கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி


கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 4:00 PM GMT)

கருங்கல் அருகே சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.

கருங்கல்,

கருங்கல் அருகே ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் ஆண்டனி (வயது 58), ஆட்டோ டிரைவர். இவர் கருங்கல் பேரூர் அ.தி.மு.க. பிரமுகர் ஆவார். ஆண்டனி தற்போது கண்ணன்விளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆண்டனி சவாரி முடிந்து ஆட்டோவை அந்த பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவர் பாலூர் பகுதியில் செல்லும்போது, பளுகல் பகுதியை சேர்ந்த விஜூகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் ஆண்டனிபின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஆண்டனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் விஜூகுமாரும் படுகாயம் அடைந்தார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆண்டனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த விஜூகுமார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ஆண்டனிக்கு லிட்டில் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Next Story