பஸ் மோதி தாய் கண்முன்னே பலியான மாணவன் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு


பஸ் மோதி தாய் கண்முன்னே பலியான மாணவன் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 4:25 PM GMT)

பஸ் மோதி தாய் கண்முன்னே பலியான மாணவன் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் கருப்பூரை சேர்ந்தவர் தூயவன். இவருடைய மனைவி தாரகை. இவர்களது மகன் சேண்டாஸ் யேசுவா (வயது 4). இவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து அதே பள்ளியில் படிக்கும் மாணவரின் தாயாரின் மொபட்டில் தாரகையும், அவரது மகனும் லிப்ட் கேட்டு ஏறி கொண்டனர். அந்த பெண் மொபட்டை ஓட்டினார்.

பள்ளிக்கூடத்தை சேர்ந்த பழுதாகி நின்ற பஸ்சை, மற்றொரு பஸ் கயிறு கட்டி இழுத்து கொண்டு வந்தது. அப்போது பஸ்சில் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்து விழுந்தது. இதனால் பின்னால் வந்த பழுதான பஸ், மொபட் மீது மோதியது. பள்ளி பஸ் ஏறியதில் சம்பவ இடத்திலேயே சேண்டாஸ் யேசுவா பரிதாபமாக இறந்தான். படுகாயமடைந்த தாரகைக்கு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று மாணவனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பழுதான பள்ளி பஸ்சை மற்றொரு பஸ்சில் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி கயிறு மூலம் கட்டி இழுத்து வந்துள்ளனர். அப்போது திடீரென கயிறு அறுந்ததால் பழுதான பஸ் இவர்களது மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் மாணவன் உயிரிழந்துள்ளான். அவனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே இதே பள்ளியில் சில சம்பவங்கள் இதுபோன்று நடந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து பாதுகாப்பின்றி செயல்பட்டு வரும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசார் மாணவனின் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மாணவனின் உடலை வாங்கி சென்றனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story