கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள்


கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 11 July 2018 9:45 PM GMT (Updated: 11 July 2018 7:59 PM GMT)

கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகின. இதனால் மழை வருமா?என விவசாயிகள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சத்தியவாடி, பேரளையூர், வெண்கரும்பூர், தீவளூர், சாத்துக்கூடல் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வெலிங்டன் ஏரி பாசனத்தை நம்பி, பயிர் சாகுபடி செய்து வந்தனர்.

பின்னர் பாசன வாய்க்காலை அதிகாரிகள் முறையாக தூர்வாராததால், மேற்கண்ட பகுதிகளுக்கு வெலிங்டன் ஏரி தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கடந்த சில ஆண்டுகளாக பயிர் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்தனர். பின்னர் ஆழ்துளை கிணறுகளின் மூலம் பாசனம் செய்து பராமரித்து வந்தனர். நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்த நிலையில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன.

இதனால் பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியாததால், விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகின. மேலும் பல இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. அதிகம் செலவு செய்து பராமரித்து வந்த நெற்பயிர்கள் தங்கள் கண் முன்னே கருகி வருவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற மழை வருமா? என ஏக்கத்துடனும், கண்ணீருடனும் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் நாங்கள் நெல் நடவு செய்த சிறிது நாட்களிலேயே மின்மாற்றி பழுதடைந்து விட்டது. இதனால் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருக தொடங்கின. இதையடுத்து பழுதடைந்த மின்மாற்றியை சரிசெய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன்பின்னர் மின்வாரிய துறை அதிகாரிகள், மின்மாற்றியை சரிசெய்தனர். ஆனால் மின்சாரம் வழங்கப்பட்ட சில நாட்களிலேயே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாசனம் செய்யாததால், பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் கருகின. மேலும் விளை நிலங்கள் பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்யவில்லை எனில், மீதமுள்ள நெற்பயிர்களையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். மேலும் நோய் தாக்குதலாலும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே கருகிய நெற்பயிர்களை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். 

Next Story