2 ரேஷன் கடைகளுக்கு ஒரு விற்பனையாளர் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி


2 ரேஷன் கடைகளுக்கு ஒரு விற்பனையாளர் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 8:23 PM GMT)

குடவாசலில் 2 ரேஷன் கடைகளுக்கு, ஒரேயொரு விற்பனையாளர் பணியாற்றுவதால் பொருட்கள் வாங்க முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அண்ணா தெற்கு வீதியில் ஒரு ரேஷன் கடையும், கீழவீதியில் ஒரு ரேஷன் கடையும் இயங்கி வருகிறது. இதில் கீழவீதியில் உள்ள ரேஷன் கடையில் மட்டுமே விற்பனையாளர் உள்ளார். அண்ணா தெற்கு வீதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளர் பணியிடம் காலியாக உள்ளது. கீழவீதியில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளரே, தெற்கு வீதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ஒருவரே 2 கடைகளிலும் மாறி, மாறி பணிபுரிவதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பொருட்கள் வாங்குவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக கவலை தெரிவித்துள்ள பொதுமக்கள், முழு நேர விற்பனையாளரை உடனடியாக பணி அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

குடவாசல் அண்ணா தெற்குவீதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றியவர் மாற்று பணிக்கு சென்று விட்டார். அங்கு கடந்த 3 மாதங்களாக விற்பனையாளர் பணியிடம் காலியாக உள்ளது. கீழவீதியில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர், தெற்கு வீதியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வினியோகம் செய்ய வேண்டி உள்ளது.

இது 2 பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பொருட்களும் முறையாக வினியோகம் செய்யப்படுவது இல்லை. சில நாட்கள் 2 கடைகளும் பூட்டப்பட்டு கிடக்கின்றன.

எனவே அண்ணா தெற்குவீதியில் உள்ள ரேஷன் கடைக்கு முழு நேர விற்பனையாளரை பணி அமர்த்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர். 

Next Story