எண்ணெய் நிறுவன டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் திருடிய 13 பேர் கைது


எண்ணெய் நிறுவன டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் திருடிய 13 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2018 10:15 PM GMT (Updated: 11 July 2018 10:15 PM GMT)

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருடிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் மத்திய அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனைக்காக பெட்ரோல் பங்க்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டேங்கர் லாரிகளின் வாடகையை உயர்த்தக்கோரி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அப்போது டேங்கர் லாரிகளில் நிரப்பப்பட்டிந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் அளவு குறைந்ததாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், அத்திப்பட்டு ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள பஞ்சர் கடைக்கு பின்புறம் குடில் அமைத்து அங்கு பெட்ரோலிய நிறுவன லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு பெட்ரோல், டீசல் திருடிய 13 பேரை பிடித்து மீஞ்சூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த பெருமாள் (வயது 24), கார்த்திக் (22), திருநெல்வேலியை சேர்ந்த சந்தோஷ் (20), மீஞ்சூரை சேர்ந்த வெங்கடேசபாண்டியன் (45), பிரவீன்குமார் (20), அத்திப்பட்டை சேர்ந்த சிவா (38), கோபால் (60), சுரேஷ்குமார் (54), அம்பத்தூர் பாடி பகுதியை சேர்ந்த கணேஷ் (20), கார்த்திக் (33), திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை (34), பாண்டு (60), அத்திப்பட்டை சேர்ந்த அய்யநாதன் (40) என்பது தெரியவந்தது.


மேலும், கடந்த 5 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவன டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை, டிரைவர்களின் சம்மதத்தின் பேரில் திருடியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பெட்ரோல் திருட பயன்படுத்தப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story