மழைத்தூவி மூலம் பயறு வகை பயிர்களுக்கு நீர்ப்பாசனம்


மழைத்தூவி மூலம் பயறு வகை பயிர்களுக்கு நீர்ப்பாசனம்
x
தினத்தந்தி 12 July 2018 7:16 AM GMT (Updated: 12 July 2018 7:16 AM GMT)

பயறு வகை பயிர்களுக்கு பாசனம் செய்ய மழைத்தூவி பாசனம் பயன்படுத்தப்படுகிறது.

ண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் பாசனத்திற்கு சிக்கன நீர் தெளிப்பு முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பயறு வகை பயிர்களுக்கு பாசனம் செய்ய மழைத்தூவி பாசனம் எனப்படும் ரெயின்கன் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை மழை

மழைத்தூவி என்பது தெளிப்பு பாசனத்தின் சற்று பெரிய அமைப்பாகும். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் நீரை 90 அடி விட்டத்திற்கு செயற்கை மழையைப் போல் பயிருக்கு தெளிக்க இயலும். இந்த கருவியை சாகுபடி திட்டத்திற்கோ அல்லது பயிரின் தன்மைக்கோ தகுந்த மாதிரி ஒரே இடத்தில் நிலையாகவோ அல்லது இடத்திற்கு இடம் மாற்றியமைத்தோ பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் இடங்கள்

இந்த தெளிப்பு பாசன மழைத்தூவியை கரும்பு, பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துப்பயிர்கள், காய்கறிகள், தானியப்பயிர்கள் போன்றவற்றுக்கு பாசனம் செய்ய பயன்படுத்தலாம். மேலும், மலைத்தோட்ட பயிர்களான தேயிலை, காப்பி, புல்வெளிகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

மழை பெய்யாத வறண்ட காலங்களில், நிலத்தில் கிடைக்கும் குறைந்த நீரைக் கொண்டு இந்த மழைத்தூவி தெளிப்பு பாசனக்கருவி மூலம் நீர்ப்பாசனம் செய்யலாம். இதனால், குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவுக்கு இரண்டு பாசனம் செய்யலாம்.

சிறப்பம்சங்கள்

இந்த கருவியை பாசனத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் வழக்கமான பாசனத்தில் இருந்து 30 முதல் 50 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது. ஒரு கருவியின் மூலம் பல ஏக்கர் பரப்பளவுக்கு இடப்பெயர்ச்சி மூலம் நீர்ப்பாசனம் செய்யலாம். மின்சக்தி மற்றும் தேவையற்ற வேலை ஆட்கள் செலவு மிச்சம் செய்யப்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் வெள்ளை ஈ போன்றவை நீரில் அடித்துச் செல்லப்படுவதால் குறைந்த பூச்சித்தாக்குதல் 1½ மணி நேரத்தில் அரை ஏக்கருக்கு பாசனம் செய்ய முடியும்.

மானாவாரி நிலங்களில்

மானாவாரி நிலங்களில் இந்த கருவியை செம்மையாக பயன்படுத்தலாம். விவசாயிகள் தங்கள் நிலங்களில் பரப்பளவிற்கு ஏற்ப பண்ணைக்குட்டைகளை அமைத்து மழைநீரை சேமிக்கலாம். இவ்வாறு சேமித்த தண்ணீரை வறட்சி காலங்களில் மழைத்தூவி பாசனம் மூலம் நீர்ப்பாசனம் அளித்து அதிக விளைச்சல் பெற முடியும்.

சிறப்பம்சங்கள்

இந்த தெளிப்புக்கருவியின் துணையால் கொத்தவரை மற்றும் பயறுவகை பயிர்களுக்கு நன்கு பாசனம் செய்ய முடியும். பருத்தி, சிறுதானியங்கள், மக்காச்சோளம் பயிர்களில் இந்த கருவியை பயன்படுத்தியதன் மூலம் 20 முதல் 30 சதவீதம் வரை விளைச்சல் அதிகரித்து உள்ளது.

காற்றின் வேகத்தை பொறுத்து இந்த கருவியின் திறன் குறையும். எனவே, இந்த கருவியை காலை அல்லது மாலை வேளைகளில் காற்று இல்லாத போது அல்லது காற்றின் வேகம் குறைவாக இருக்கும் போது இயக்க வேண்டும். இந்த கருவியின் விலை என்பது நிலத்தை ஈரமாக்கும் தூரத்தை பொறுத்து மாறுபடும்.

எனவே, விவசாயிகள் சிக்கன நீர்ப்பாசனத்திற்கு மழைத்தூவி நீர் தெளிப்பு கருவியை பயன்படுத்தி நீர் சிக்கனத்தை கடைப்பிடித்து மகசூலை அதிகரிக்கலாம். 

Next Story