தூத்துக்குடியில் புனித பனிமயமாதா ஆலய விழா முன்னேற்பாடு கூட்டம்


தூத்துக்குடியில் புனித பனிமயமாதா ஆலய விழா முன்னேற்பாடு கூட்டம்
x
தினத்தந்தி 12 July 2018 9:45 PM GMT (Updated: 12 July 2018 2:25 PM GMT)

தூத்துக்குடியில் புனித பனிமயமாதா ஆலய விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் புனித பனிமயமாதா ஆலய விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.

பனிமயமாதா ஆலயம் 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், புனித பனிமய மாதா பேராலய பெருவிழா நிகழ்வுகள் தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடியில் புனித பனிமய அன்னை பேராலய பெருவிழா நிகழ்வுகள் வருகிற 25–ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6–ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள அதிக அளவிலான மக்கள் வருவார்கள். எனவே, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி மூலம் செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த திருவிழாக்களில் இரவிலும் மக்கள் அதிகளவில் கூடுவதால் தேவையான விளக்குகளை பொருத்த வேண்டும்.

வசதிகள் 

தீயணைப்புத்துறையின் மூலம் தேவையான தீத்தடுப்பு நடவடிக்கைகளையும், மருத்துவ துறையின் மூலம் முதலுதவி சிகிச்சை மையங்களையும், 108 ஆம்புலன்ஸ் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மாநகராட்சியின் மூலம் கூடுதல் பணியாளர்களை நியமித்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து துறையின் மூலம் தேவையான பஸ் வசதிகளையும், காவல்துறையின் மூலம் போதிய பாதுகாப்பு வசதிகளையும், மின்சார துறையின் மூலம் மின்சாரம் தடையின்றி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், புனித பனிமய அன்னை திருத்தல பேராலய பங்குதந்தை லெரின் புரோஸ், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பரிதா ஜெரின், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, உதவி ஆணையர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமா சங்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story