டிசம்பர் மாதம் வரை மட்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகள் நடத்தலாம் மதுரை ஐகோர்ட்டு அனுமதி


டிசம்பர் மாதம் வரை மட்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகள் நடத்தலாம் மதுரை ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 12 July 2018 11:30 PM GMT (Updated: 12 July 2018 8:20 PM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகளை டிசம்பர் மாதம் வரை நடத்தலாம் என மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கடைக்காரர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ராஜூநாகுலு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் சங்கத்தில் 115 உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் மஞ்சள், குங்குமம், பூஜை பொருட்கள், செயற்கை நகைகள், இந்து மத புத்தகங்கள், பூ போன்றவற்றை விற்பனை செய்கிறோம். இந்த கடைகளுக்கு மாதந்தோறும் மொத்தம் ரூ.2 லட்சம் வாடகை செலுத்துகிறோம். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 2-ந்தேதி இரவு 10.20 மணியளவில் 72-வது எண் கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் எரிந்து சாம்பலாயின.


மின் கசிவு தான் விபத்துக்கு காரணம். விபத்து நடந்தபோது மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. அப்போது எலக்ட்ரீசியன் பணியில் இல்லை. அவர் பணியில் இருந்திருந்தால் தீ விபத்தை தடுத்திருக்கலாம். கோவில் நிர்வாகத்தின் தவறால் தான் தீ விபத்து நடந்துள்ளது. எனவே கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதை சமாளிக்க கோவிலில் உள்ள கடைகளை காலி செய்யும் நடவடிக்கையில் கோவில் நிர்வாகம் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அனைத்து கடைகளையும் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அதுவரை கடை வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கடைக்காரர்களிடம் உறுதிமொழிப்பத்திரம் பெற்றுக்கொண்டு கோவில் வளாகத்தில் கடையை திறக்க அனுமதிக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் கடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.


கோர்ட்டு உத்தரவின்படி டிசம்பர் 31-ந்தேதி வரை மீனாட்சி அம்மன் கோவில், வீரவசந்தராயர் மண்டபம் ஆகியவற்றில் உள்ள கடைகளை திறக்கவும், அவற்றை நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்துக்கு மனு அளித்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே கோவில் கடைகளை திறக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 31-ந்தேதி வரை கோவில் அம்மன் சன்னதியில் உள்ள 51 கடைகளை திறக்க அனுமதியளித்தார். அதே நேரத்தில் கடை உரிமையாளர்கள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கடைக்கு எந்த வாடகை பாக்கியும் இல்லாமல் வாடகை செலுத்தி இருக்க வேண்டும். முக்கியமாக டிசம்பர் 31-ந்தேதி வரை மட்டுமே கடை நடத்துவோம் என உறுதிமொழிப் பத்திரம் கோவில் நிர்வாகத்திடம் கொடுத்து கடைகளை திறந்து கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தார்.

Next Story