வாலிபரின் தலை கிடைக்காததால் அடையாளம் காண்பதில் சிக்கல்


வாலிபரின் தலை கிடைக்காததால் அடையாளம் காண்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 12 July 2018 9:45 PM GMT (Updated: 12 July 2018 8:28 PM GMT)

கோவை சிங்காநல்லூர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபரின் தலை கிடைக்காததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கோவை,

கோவை ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழ், இருகூர் ரெயில் நிலையம் செல்லும் பகுதியில் தண்டவாளத்தில் கடந்த 9-ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடந்தது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் மட்டுமே சம்பவ இடத்தில் கிடந்தது.

இதை அறிந்த போத்தனூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். விசாரணையில், பிணமாக கிடந்த வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. உடல் கிடந்த இடத்தை சுற்றிலும் வாலிபரின் தலை கிடக்கிறதா? என்று கடந்த 4 நாட்களாக ரெயில்வே போலீசார் தேடி பார்த்தனர். ஆனால் தலை கிடைக்கவில்லை.

தலை இல்லாததால் இறந்தவர் யார்? என்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இறந்த வாலிபர் முக்கால் டவுசர், கட்டம் போட்ட முழுக்கை சட்டை, வலது கையில் காப்பு அணிந்துள்ளார். பிணத்தின் புகைப்படத்தை போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் காண்பித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பிணமாக கிடந்த வாலிபரின் தலை கிடைக்காததால் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உடல் வைக்கப்பட்டு உள்ளது. ரெயில் என்ஜினில் சிக்கி தலை எங்காவது சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம். தலை கிடைத்தால் தான் இறந்தவர் யார் என்பது தெரியவரும். அப்போது தான், இந்த வழக்கில் மேற்கொண்டு நடத்த முடியும்.

எனவே அந்த வாலிபர் அணிந்துள்ள ஆடைகளை வைத்து அடையாளம் காணும் முயற்சி நடக்கிறது. சட்டையில் டெய்லர் அடையாளம் எதுவும் இல்லை. சுற்று வட்டார பகுதிகளில் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏதாவது அடையாளம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story