செப்டம்பர் மாதத்துக்குள் சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்


செப்டம்பர் மாதத்துக்குள் சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்
x
தினத்தந்தி 12 July 2018 10:30 PM GMT (Updated: 12 July 2018 8:48 PM GMT)

சென்னை முழுவதும் செப்டம்பர் மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிந்துவிடும் என மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

அடையாறு,

சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புதிதாக நடைபாதை, உடற்பயிற்சி கூடம், நூலகம், மழை நீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது.

இவற்றை நேற்று மாலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், திறந்துவைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது.

மயிலாப்பூர் பகுதியில் இதுவரை 45 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. சென்னை நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தில் உள்ளன. செப்டம்பர் மாதத்துக்குள் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழுமையாக முடிந்துவிடும்.

பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களின் ஒத்துழைப்புடன் சென்னை முழுவதும் கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டு உள்ளோம். இதன் மூலம் குற்றங்கள் குறையும், குற்றவாளிகளையும் எளிதில் கண்டுபிடிக்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் உதவியாக இருக்கும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்போது ஒன்றிரண்டு கேமராக்கள், சாலையை கண்காணிக்கும்படி அமைக்க வேண்டும். வணிக நிறுவனங்களும் சாலையை பார்த்தபடி கேமராக்களை அமைக்க வேண்டும் என அரசு விதி உள்ளது. அதன்படியே அவர்கள் அமைக்கிறார்கள். யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

மாநகரம் முழுவதும் கேமராக்கள் பொருத்தும் பணி ஒருபுறம் நடைபெறும் நிலையில், மற்றொரு புறம் போலீஸ் நிலையங்களை தூய்மையாக வைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் பழைய வாகனம் எதுவும் இப்போது இல்லை. அதை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. உரிமையாளர்கள் இல்லாத வாகனங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த போலீஸ் நிலையத்தில் உடற்பயிற்சி கூடம், நூலகம், மழைநீர் சேமிப்பு தொட்டி போன்றவைகள் போலீசாரின் ஆர்வத்தால் மிக சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் விரைவில் சென்னை மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் தூய்மையான போலீஸ் நிலையங்களாக மாறும். தூய்மையான போலீஸ் நிலையங்கள் உள்ள மாதிரி மாநகராக சென்னை மாநகரம் மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் சரவணன் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story