நடிகர் யஷ்சை கொல்ல பிரபல ரவுடி திட்டமிட்டாரா?


நடிகர் யஷ்சை கொல்ல பிரபல ரவுடி திட்டமிட்டாரா?
x
தினத்தந்தி 12 July 2018 11:35 PM GMT (Updated: 12 July 2018 11:35 PM GMT)

நடிகர் யஷ்சை கொல்ல பிரபல ரவுடி திட்டமிட்டாரா? என்பது குறித்து குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சதீஸ்குமார் பதிலளித்துள்ளார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர், பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடியான சைக்கிள் ரவியை குற்றப்பிரிவு போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ரவுடி ரவிக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதும், அதனை அவர் சட்டவிரோதமாக சம்பாதித்து இருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், நடிகர் யஷ்சை ரவுடி சைக்கிள் ரவி, மற்றொரு ரவுடியுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் ரவியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இது பெங்களூரு மட்டுமின்றி நேற்று மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சதீஸ்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நடிகர் யஷ்சை கொலை செய்ய ரவுடி சைக்கிள் ரவி திட்டமிட்டதாக வெளியான தகவல்கள் உண்மை அல்ல. இதுதொடர்பாக நடிகர் யஷ் போலீசாரிடம் எந்த புகாரும் கொடுக்கவில்லை. போலீஸ் அதிகாரிகளை சந்தித்தும் அவர் பேசவில்லை. ரவுடி ரவியை துப்பாக்கியால் சுட்டு பிடித்து விசாரித்தபோது, அதுபோன்ற தகவல்கள் எதுவும் குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைக்கவில்லை.

நடிகர் யஷ்சை கொல்ல முயன்றதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் யார்? என்பது தெரியவில்லை. மக்களிடையே உண்மைக்கு புறம்பான மற்றும் தவறான தகவல்களை பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சதீஸ்குமார் கூறினார். 

Next Story