கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்கு ரூ.47 ஆயிரம் கோடி செலவு செய்தோம் - சித்தராமையா


கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்கு ரூ.47 ஆயிரம் கோடி செலவு செய்தோம் -  சித்தராமையா
x
தினத்தந்தி 12 July 2018 11:45 PM GMT (Updated: 12 July 2018 11:45 PM GMT)

கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்கு ரூ.47 ஆயிரம் கோடி செலவு செய்தோம் என்று சட்ட சபையில் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. புதிய கூட்டணி அரசின் முதல் கூட்டம் என்பதால் முதல் நாள் இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். அதைத்தொடர்ந்து 5-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்தார்.

பட்ஜட் மீது விவாதம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 9-வது நாள் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் மீது விவாதம் தொடங்கியது. இதில் பா.ஜனதா உறுப்பினர் பசனகவுடா பட்டீல் யத்னாள் பேசுகையில், “கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்காக ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் கோடி வீதம் ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்யப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசு சொன்னது. ஆனால் அதன்படி அந்த அரசு கிருஷ்ணா மேல் அணை திட்ட பணிகளுக்கு செலவு செய்யவில்லை“ என்றார்.

அப்போது முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா குறுக்கிட்டு, “ஒசப்பேட்டே முதல் கூடலசங்கமா வரை நாங்கள் பாதயாத்திரை நடத்தினோம். அப்போது கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்வோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அதையும் தாண்டி 5 ஆண்டுகளில் ரூ.58 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கினோம். இதில் ரூ.47 ஆயிரம் கோடி செலவு செய்து இருக்கிறோம். ஆனால் அதற்கு முந்தைய பா.ஜனதா ஆட்சியில் வெறும் ரூ.18 ஆயிரம் கோடி தான் கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்கு செலவு செய்யப்பட்டது“ என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய பா.ஜனதா உறுப்பினர் பசவராஜ் பொம்மை, “பட்ஜெட் அளவுக்கு உட்பட்டு நாங்கள் ரூ.18 ஆயிரம் கோடி செலவு செய்தோம். நாங்கள் ஆட்சி செய்தபோது கிருஷ்ணா நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. நீங்கள் ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்வதாக வாக்குறுதி அளித்தீர்கள்“ என்றார். 

Next Story