எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் பெற மாணவர்களுக்கு கால அவகாசம் மண்டல துணை இயக்குனர் தகவல்


எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் பெற மாணவர்களுக்கு கால அவகாசம் மண்டல துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 13 July 2018 10:30 AM GMT (Updated: 13 July 2018 10:30 AM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் பெற மாணவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக, அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் சாய்லட்சுமி தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் பெற மாணவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக, அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் சாய்லட்சுமி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதிப்பெண் சான்றிதழ்

நெல்லை மண்டல ஆளுகைக்குட்பட்ட நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வு எழுதியவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலம் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் சான்றிதழ்கள் எங்கள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு திரும்ப வந்து உள்ளன.

இதன் தொடர்ச்சியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் மார்ச் 2012, ஜுன் 2012, அக்டோபர் 2012, மார்ச் 2013, ஜீன் 2013, அக்டோபர் 2013, மார்ச் 2014, ஜுன் 2014 மற்றும் அக்டோபர் 2014 ஆகிய 9 பருவங்களுக்குரிய எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ்கள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ளன.

கால அவகாசம்

தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வருடங்கள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அளிக்கப்பட வேண்டும்.எனவே இந்த பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அலுவலக வேலை நேரத்தில் நேரில் வந்தோ அல்லது ரூ.45 மதிப்புள்ள தபால்தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் தேர்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதத்துடன் இணைத்து அனுப்பி உரிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் இந்த பருவ மதிப்பெண் சான்றிதழ்கள் விதிமுறைகளின்படி அழிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story