பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திர ரத்னு பேச்சு


பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திர ரத்னு பேச்சு
x
தினத்தந்தி 13 July 2018 9:15 PM GMT (Updated: 13 July 2018 2:26 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திர ரத்னு கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திர ரத்னு கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திர ரத்னு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திர ரத்னு பேசியதாவது:–

துணிப்பைகள்

முதல்– அமைச்சர் சட்டமன்றத்தில், மறு சுழற்சி செய்ய இயலாத, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்கள் 2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் தவிர்க்கப்படும் என்று அறிவித்து உள்ளார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக்கை தவிர்ப்பதற்கு முதலில் நமக்குள்ளே மாற்றம் கொண்டு வரவேண்டும்.

அதன்பிறகு குடும்பத்தினரிடமும், வீட்டின் அருகில் உள்ளவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கலெக்டர் அலுவலகம், பிற அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அரசு அலுவலர்கள் துணிப்பைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

உறுதி

வருகிற ஆகஸ்ட் மாதம் 15–ந் தேதிக்குள், அரசு அலுவலக வளாகத்திலும், செப்டம்பர் 15–ந் தேதிக்குள் பள்ளி வளாகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் 100 சதவீதம் பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்டு உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து குறும்படம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பது தொடர்பான பணிகளை தாதமின்றி உடனடியாக தொடர வேண்டும்.

இந்த திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற அனைத்துத்துறை அலுவலர்களும், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி மற்றும் சமுதாய அமைப்புகள் ஒருங்கிணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மேற்கொள்ளும் பிளாஸ்டிக் தவிர்ப்பு தொடர்பான பணிகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திர ரத்னு கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான்வர்க்கீஸ், மாவட்ட வன அலுவலர் சம்பத், உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story