வள்ளியூர் அருகே பயங்கரம் 3 பவுன் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை மர்மநபருக்கு வலைவீச்சு


வள்ளியூர் அருகே பயங்கரம் 3 பவுன் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 July 2018 9:15 PM GMT (Updated: 13 July 2018 2:35 PM GMT)

வள்ளியூர் அருகே 3 பவுன் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வள்ளியூர், 

வள்ளியூர் அருகே 3 பவுன் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூதாட்டி 

வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் திரையரங்கம் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய மிக்கேல் மனைவி இருதயமேரி (வயது 75). அவருடைய கணவர் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவர்களில் ஆரோக்கிய வில்சன் மிக்கேல் என்பவர் தவிர மற்ற 3 பேரும் திருமணம் முடிந்து வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் இருதயமேரி மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தார்.

வடக்கன்குளத்தில் வசித்து வரும் ஆரோக்கிய வில்சன் மிக்கேல், காவல்கிணறு அருகே மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உந்தும வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் மட்டும் அவ்வப்போது தெற்கு கள்ளிகுளத்துக்கு வந்து தனது தாயாரை பார்த்துவிட்டு செல்வாராம்.

அடித்துக் கொலை 

இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் இருதயமேரி தனது வீட்டில் உள்ள நார் கட்டிலில் படுத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் திடீரென தான் வைத்திருந்த மண்வெட்டி கனையால் இருதயமேரியின் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இருதயமேரி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருதயமேரி இறந்தார்.

மோப்ப நாய் சோதனை 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ், இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் நெல்லையில் இருந்து தடயவியல் நிபுணர் ஆனந்தி, கைரேகை நிபுணர் அகஸ்டா ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் நெல்லையில் இருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது அங்கிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு வெளியே சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

இச்சம்பவம் பற்றி அறிந்ததும் ஆரோக்கிய வில்சன் மிக்கேல் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் இதுதொடர்பாக வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இருதயமேரி தனியாக இருப்பதை நன்கு அறிந்த நபரே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. 3 பவுன் நகைக்காக வீடு புகுந்து மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story