4 ஊராட்சிகளுக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு


4 ஊராட்சிகளுக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 13 July 2018 10:30 PM GMT (Updated: 13 July 2018 5:30 PM GMT)

தேவிபட்டினம் உள்பட 4 ஊராட்சிகளுக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதே நிலை நீடித்தால் பொதுநல வழக்கு தொடரப்படும் என முன்னாள் ஊராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் யூனியனுக்கு உட்பட்ட முக்கிய பகுதியாக விளங்குவது தேவிபட்டினம். சுமார் 18,000 மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. மேலும் ஆன்மிக தலமாக திகழும் இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷானத்தை வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் தேவிபட்டினம் மற்றும் அருகில் உள்ள கழனிக்குடி, மாதவனூர், வெண்ணத்தூர், பாண்டமங்கலம், நாரணமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையோரம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 6 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது ராமநாதபுரம்-திருச்சி இடையே புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையோரம் உள்ள காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்து கடந்த பல நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் தள்ளுவண்டிகளில் நீண்ட தூரம் சென்று குடங்களில் தண்ணீர் சேகரித்து வருகின்றனர். மேலும் பல கிராமங்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சமயத்தில் காவிரி குடிநீர் வீணாக செல்வது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து தேவிபட்டினம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜாகீர் உசேன் கூறியிருப்பதாவது:- தேவிபட்டினம்-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. தேவிபட்டினத்தில் உள்ள காவிரி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு பின்னர் தேவிபட்டினம், கழனிக்குடி, மாதவனூர், வெண்ணத்தூர், பாண்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. தற்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் அனைத்தும் யாருக்கும் பயன்படாமல் சாலையோரம் குளம் போல தேங்கி கிடக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாததால் இவ்வாறு அடிக்கடி நிகழ்கிறது. குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த சமயத்தில் தண்ணீரை வீணாக்காமல் முறையாக பராமரித்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story