திருவாடானை பகுதியில் அனுமதிபெறாத குடிநீர் இணைப்புகள் அகற்றம்


திருவாடானை பகுதியில் அனுமதிபெறாத குடிநீர் இணைப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 13 July 2018 10:30 PM GMT (Updated: 13 July 2018 5:35 PM GMT)

திருவாடானை பகுதியில் அனுமதிபெறாத குடிநீர் இணைப்புகள் அகற்றப்பட்டன.

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள கல்லூர் ஊராட்சியில் திருவிடைமிதியூர், சூச்சணி, கிழவண்டி, தொத்தார்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சி.கே.மங்கலத்தை அடுத்துள்ள ஓரிக்கோட்டை தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு கிழவண்டி கிராமத்தில் உள்ள சிறிய தரைமட்ட தொட்டியின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஓரிக்கோட்டையில் இருந்து குடிநீர் குழாய்கள் செல்லும் பாதையில் சேந்தனி, பாரதிநகர் பகுதியில் அனுமதிபெறாமல் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் திருவிடைமிதியூர் உள்பட பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக நடைபெறாமல் தடைபட்டுஉள்ளது. அதனை தொடர்ந்து இப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போது அனுமதி பெறாத குடிநீர் குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.


அனுமதி பெறாத குடிநீர் குழாய்களை அகற்றக்கோரி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜி, கல்லூர் ஊராட்சி செயலாளர் ரதிதேவி ஆகியோரும் புகார் செய்திருந்தனர். அதனை தொடர்ந்து காவிரி குடிநீர் திட்ட உதவி பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் குடிநீர் வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த சுமார் 7 குடிநீர் இணைப்புகளை அகற்றி திருவிடைமிதியூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் முறையாக நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Next Story