ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது


ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 13 July 2018 10:30 PM GMT (Updated: 13 July 2018 7:20 PM GMT)

கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார், சிங்காரப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்குட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாலையோரம் ஒருவர் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிச்சாண்டி (வயது 43) என்பதும், ரேஷன் அரிசிகளை கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பிச்சாண்டி தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று பிச்சாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பிச்சாண்டி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story