கிருதுமால் நதி பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் தொடரும் வாகன விபத்துகள்


கிருதுமால் நதி பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் தொடரும் வாகன விபத்துகள்
x
தினத்தந்தி 13 July 2018 11:15 PM GMT (Updated: 13 July 2018 8:44 PM GMT)

வீரசோழன் அருகே உள்ள கிருதுமால் நதி பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காரியாபட்டி,

நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் கிராமம் அருகே உள்ள கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் குறுகலான பாலமாக உள்ளது. இந்த பாலத்தில் வழியாக நரிக்குடி, பார்த்திபனூர் உள்பட பல இடங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் பாலத்தின் முடிவில் ஒரு தனியார் பள்ளி உள்ளது.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த பாலம் வழியாகத்தான் சென்று வருகின்றனர். அப்போது பாலத்தில் எதிரெதிரே வாகனங்கள் வரும் போது, பாலத்தின் வழியாக செல்லும் மாணவிகள், பொதுமக்கள் விலகும் போது, பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் தவறி பாலத்தின் கீழ் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.


இதுபோல தடுப்புச்சுவர் இல்லாததால், பல வாகனங்கள் பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி விடுகிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் நடைபெற்று வருகிறது. வீரசோழன் கிராம மக்கள் பாலத்தில் தடுப்புச் சுவர் ஏற்படுத்த வேண்டும் என்று பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று ஒரு பாலத்தில் வந்த போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட விலகும் போது தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தால், பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பாலத்தில், விரைவில் தடுப்புச் சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story