குறுவை சாகுபடி தொகுப்பு உதவி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


குறுவை சாகுபடி தொகுப்பு உதவி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 13 July 2018 9:45 PM GMT (Updated: 13 July 2018 9:04 PM GMT)

குறுவை சாகுபடி தொகுப்பு உதவி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

2018-ம் ஆண்டில் குறுவை பருவ நெல் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை இரு மடங்காக உயர்த்திட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் குறுவை தொகுப்பு உதவி திட்டத்தினை செயல்படுத்திட அறிவித்து உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களிலுள்ள டெல்டா பகுதி கிராமங்களில் மட்டும் இத்திட்டம் செயல் படுத்திட அனுமதிக்கப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டம் ரூ.61.736 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

முதலாவதாக நெல் சாகுபடி செய்வதற்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல் அனைத்து வேளாண்மை விரிவாக்க நிலையங்கள் மூலம் வாங்குவதற்கு கிலோ ரூ.17.50 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நெல் சாகுபடிக்கு, பாய் நாற்றங்கால் அமைத்து எந்திரம் மூலம் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மானிய தொகையாக ரூ.4 ஆயிரம் வீதம் அனுமதித்து விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைத்திடவும், இத்திட்ட உட்பிரிவினை அரியலூர் மாவட்டத்தில் 500 ஏக்கரில் செயல்படுத்திட ரூ.20 லட்சம் மானிய தொகையாக வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி நிலங்களில் துத்தநாக சத்து பற்றாக்குறையை நீக்கிட சிங்க் சல்பேட் அரியலூர் மாவட்டத்தில் 560 ஏக்கரில் செயல்படுத்திட ரூ.1.12 லட்சம் மானிய தொகையாக வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது. குறுவை பருவத்தில் இறவை உளுந்து சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 500 ஏக்கரில் செயல்படுத்திட ரூ.1.92 லட்சம் மானிய தொகையாக வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

உளுந்து பயிர்களில் திரவ உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் அரியலூர் மாவட்டத்தில் 500 ஏக்கரில் செயல் படுத்திட ரூ.30 ஆயிரம் மானியத் தொகையாக வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது. உளுந்து பயிரில் டி.ஏ.பி. இலைவழி தெளிப் பானது பூக்கும் பருவத்திலும், அதன்பிறகு 15 நாட்களிலும் ஏக்கருக்கு தலா 5 கிலோ வீதம் ஆக இருமுறை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து விரிவாக்க மையங்கள் மூலமாக அரியலூர் மாவட்டத்தில் 500 ஏக்கரில் செயல் படுத்திட ரூ.1.3 லட்சம் மானியத் தொகையாக வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு தங்களது வயல்களில் உள்ள விவசாயிகளுக்கும், கடந்த 2 ஆண்டுகளில் நீர்ப்பாசன குழாய் களை இதர மானிய திட்டங்களில் இதுவரை பெற்று பயனடையாத விவசாயிகளுக்கு, உழவன் செயலியில் பதிவு செய்து அரியலூர் மாவட்டத்திற்கு 10 யூனிட் குழாய்கள் வினியோகித்திட ரூ.1.5 லட்சம் மானிய தொகையாக வழங்கிட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. குறுவை உழவுப் பணி மேற்கொள்ள 50 சதவீத மானியத்தில் பவர் டில்லர் 10 எண்கள் வழங்கப்பட உள்ளது. எந்திரம் ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

குறுவை நெல் சாகுபடி செய்ய முடியாத விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்திற்கு 100 ஆயில் என்ஜின்கள் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் என்ஜின் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மானிய விலையில் ஆயில் என்ஜின் பெற்று பயிறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிக்கன முறையில் பாசன நீரை பயன்படுத்திட 100 நீர் தெளிப்பான்கள் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.9.968 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி தொகுப்பு உதவி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டியல் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் தயார் செய்யப்பட்டு வருகிறது. எனவே குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் அரசு மானியத்தை பெற்றிட வேளாண்மை விரிவாக்க மையங்களில் முன்னுரிமை பதிவேட்டில் தங்களது பெயரை பதிவு செய்திடவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உழவன் செயலி மூலம் வேளாண் எந்திரங்களுக்கு பதிவு செய்திடும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப் படையில் எந்திரங்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அதில் கூறியுள்ளார்.

Next Story